62 ஆண்டுகளாக தூர்வாராத கே.ஆர்.பி., அணை..! வண்டல் நிறைந்து நீரை தேக்க முடியாத அவலம்..!
Krishnagiri Memes™கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணை கட்டி, 62 ஆண்டுகளை கடந்தும் தூர்வாரவில்லை என்பதால், வண்டல் மண் நிறைந்து, அணையில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உருவாகி உள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியமுத்தூர் அருகே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கில் கட்டப்பட்ட கே.ஆர்.பி., அணை, 1957ல் திறக்கப்பட்டது. 52 அடி ஆழத்தில், 8 கி.மீ., சுற்று பரப்பளவு கொண்ட இந்த அணையின் வலதுபுற வாய்க்கால், 14.20 கி.மீ., நீளமும், இடதுபுற வாய்க்கால், 18.20 கி.மீ., நீளமும் கொண்டது. இந்த அணை கட்டியபோது இருந்த, 9,012 ஏக்கர் சாகுபடி பரப்பு, தற்போது, 40 ஆயிரம் ஏக்கராக அதிகரித்துள்ளது.
அணையின் முழு கொள்ளளவான, 52 அடியில், மதகின் கீழ், 10 அடியும், மதகின் உயரமான, 20 அடி என, மொத்தம், 30 அடிக்கு மட்டுமே நீரை தேக்க முடியும். மீதமுள்ள, 22 அடிக்கு சேறும், வண்டல் மண்ணும் தேங்கி உள்ளது. இதனால், நீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாததால், அணையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள், மிகவும் சிரமப்படுகின்றனர். பல ஆண்டுகளாக அணையை தூர்வார கோரிக்கை வைத்தும், பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இது குறித்து, கே.ஆர்.பி., அணை பாசன விவசாயிகள் கூறியதாவது: கே.ஆர்.பி., அணை கட்டி, 62 ஆண்டுகள் கடந்தும், ஒரு முறைகூட அணையை தூர்வாரவில்லை. அணையின், 52 அடியில், 22 அடிக்கு சேறும், வண்டல் மண்ணும் உள்ளதால், பாதி அளவுக்கு மட்டுமே தண்ணீரை சேமிக்க முடிகிறது. தொடர் மழையின்போது, போதிய தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அணை நிரம்பி, உபரிநீர் வீணாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
எனவே, அணையை தூர்வாரி, முழு கொள்ளளவில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை வாய்க்கால் மூலம், மாவட்டத்தில் உள்ள, 2,000 ஏரிகளில் நிரப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, கடைமடை விவசாயிகள் பயன்பெற முடியும். காவிரி நீரைக்கேட்டு, கர்நாடகா மாநிலத்துடன் அடிக்கடி மோதும் தமிழக அரசு, நமக்கு கிடைக்கும் நீரை தேக்கி வைக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
____